Wednesday, February 15, 2006

வாழ்த்துகிறார் டி.ஆர்

கீழேயுள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்ப்பதற்க்கு, படத்தின் மீது 'கிளிக்'கவும்

Monday, January 16, 2006

ஏய் பெருசு!

அண்மையில் ஒரு அலுவலக நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் சுமார் 20 வருடங்களுக்கும் முன்னர் இந்தியா சென்றிருப்பதாக கூறினார். இப்பொழுது தான் கேள்விப்படுவது போல் அப்பொழுது இந்தியா வளர்ச்சி பெற்றிருக்கவில்லையென்று கூறிய அவர், "உங்கள் நாட்டு கலாசாரம் என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக, பெரியவர்களுக்கு நீங்கள் தரும் மரியாதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்". சிரித்துக் கொண்டு பெருமையாக ஆமோதித்தேனே தவிர, அவர் கூறும் உலகிலிருந்து வெகு தொலைவு வந்து விட்டோம் என்ற உணர்வு உள்ளுக்குள் இல்லாமல் இல்லை.


பொது இடங்களிலும், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பெரியவர்களை அஃறிணையை அழைப்பது போல் "ஏய் பெருசு" என விளிப்பது இப்பொழுது சர்வ சகஜமாகிவிட்டது. முன்பெல்லாம் சென்னையில் உள்ள பேருந்துகளில் நடத்துனர்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் "வா, ஏறு" என்று ஒருமையில் அழைப்பர். இப்பொழுது இந்த பழக்கம் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பரவி விட்டது. ஏன் இந்த சீரழிவு? கைக்குட்டை துணியில் ஆடை தைத்து போட்டுக்கொண்டு கெட்ட ஆட்டம் ஆடினால் மட்டும் தான் கலாசாரம் கெடுகிறது என்று நினைப்பதனாலா? இதிலிருந்து மாற முடியுமா நம்மால்?

Friday, January 13, 2006

தை பொறக்கும் நாளை.. விடியும் நல்ல வேளை

போகிப் பண்டிகை ஆனாலே நம் இந்திய தொலைக்காட்சிகளில் 'தளபதி' படத்தில் வரும் பாடல் ஒன்றை ஒளிபரப்பி விடுவார்கள். இந்த பண்டிகையின் நோக்கமான "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கருத்தை நம்மவர்கள் எப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்று - நமது சிங்கார சென்னையில் இந்த நாளில் காணப்படும் புகை மண்டலம். பழையவற்றை கழிக்க வேன்டியது தான், அதற்காக அவற்றை ஏன் எறிக்க வேண்டும்? அது என்னவோ சென்னையில் வசித்த வரை இப்பழக்கம் தவறானதாக தெரியவில்லை. எங்கள் வீட்டில், இந்த எறிக்கும் பழக்கம் இல்லையென்ற போதிலும், நகரமே புகை மண்டலமாக இருக்கும் காட்சி நன்றாகத்தான் தோன்றியது. அடையாறு பாலத்தின் மீது, 30 மீட்டருக்கும் குறைவான visibility-யில் வண்டி ஓட்டி கொண்டு செல்வது பெருமையாகத் தான் இருந்தது.

திரவியம் தேட திரைகடல் தாண்டி வந்த பிறகு தான் இந்த பழக்கம் எவ்வளவு சுகாதார கேடானது என்பதை உணர்ந்தேன். சுகாதாரம், சுற்றுபுற சூழல் என்று இந்த மேற்கத்திய நாட்டவர், முன் ஜாக்கிரதை முத்தண்ணனாக இருந்தாலும், அவர்கள் சொல்வதிலும் விஷயம் இருக்கத்தான் செய்கிறது. காகிதம், குப்பைகளை எறித்து அந்த காற்றை சுவாசிப்பதில் என்ன பெருமை இருக்கிறது? தமிழகத்திலேயே கூட சென்னையிலிருந்து சற்று தெற்க்கே சென்றால், இந்த பழக்கம் இருப்பதாக தெரியவில்லை. மாற்றம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. மிக குறுகிய காலத்தில், மழை நீர் சுத்திகரிப்பை பற்றி உணர முடிந்த நமக்கு, இந்த எறிக்கும் பழக்கத்தை விட முடியாதா என்ன? அடுத்த வருடமாவது புகையில்லா போகியாக இருக்கட்டுமே. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பி.கு: Visibility - இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் என்னவென்று சொல்ல முடியுமா?

Wednesday, January 11, 2006

அது ஒரு கனாக்காலம்

'அது ஒரு கனாக்காலம்' என்ற காவியத்தை சமீபத்தில் பார்தேன். சுமாரான படத்தில் தனுஷ்-ம், ப்ரியா மணியும் நன்றாகவே நடித்திருந்தனர். அது ஏன், பாலு மகேந்திரா அடிக்கடி - சின்னவீடு (மறுபடியும், இரட்டை வால் குருவி), விடலை பருவ காதல் (வண்ண வண்ண பூக்கள், அ.ஒ.க.காலம்) போன்ற விஷயங்களையே சுற்றி சுற்றி வருகிறார்? அல்லது, நான் பார்க்கும் பாலுமகேந்திரா படங்கள் தான் அப்படி அமைகிறதா?

Tuesday, January 10, 2006

வைகுண்ட ஏகாதேசி

இன்று வைகுண்ட ஏகாதேசி உற்சவம். திருவரங்கத்தில் ஓரிரு வருடங்கள் வசித்திருந்தாலும், இந்த நாளின் அருமை நன்கு விளங்கி விடும். மார்கழி மாத அதிகாலையில் அரங்கனுடன் சுவர்க்க வாசலை கடக்கக் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிடலங்கா. திருவரங்கத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து இந்த உற்சவத்தினைக் காண வந்திருக்கும் விருந்தினர் கூட்டம் களை கட்டும். தீபாவளி, பொங்கல் திருநாட்களை விட திருவரங்கத்தினருக்கு இந்த நாளானது அதிக உற்சாகம் அளிக்க கூடியது என்று சொன்னால் மிகையாகாது. இந்த வருடம் காவிரி கரை புரண்டு ஒடுகிறதாம். மனதிற்க்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்த செய்தியை, தொலைதேசத்தில் உட்கார்ந்து கொண்டு, கண்களில் கற்பனை விரிய மனதில் அசை போட்டுக் கொண்டே, அனைவரும் இன்புற்றிருக்க அரங்கனை வேண்டிக்கொண்டு இந்த நாளை கழிக்கிறேன்.

பச்சைமா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே எனும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

Friday, December 23, 2005

பிங்க் சொக்காய்

முதல் முறையாக இங்கிலாந்திற்க்கு கிளம்பும் பொழுது "என்ன வாங்கி வந்தாலும், பிங்க் கலரில் சட்டை மட்டும் வாங்கி விடாதே" என்று இங்கு வசித்த நண்பன் ஒருவன் எச்சரித்தான். இவன் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று திமிர நினைத்தாலும், ஏதோ காரணம் இருந்து தொலைக்க போகிறது என்று அவன் சொன்ன பேச்சை கேட்டேன். வந்தவுடன் தான் விஷயம் புரிந்தது - பொதுவாக ஒரின சேர்க்கையாளர்கள் மட்டுமே அந்த நிற சட்டையை விரும்பி அணிவார்களாம். உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், இந்த ஊரில் அதிகமாக யாரும் பிங்க் சொக்காய் அணிவதில்லை. நல்ல வேளை - அதிக பிரசங்கித்தனம் எதுவும் செய்யாமல் இருந்தேன்.

இங்கு நேற்று ஏதோ நல்ல முகூர்த்த நாள் போலிருக்கிறது. இந்த ஊரில் கல்யாணம் கொள்ளும் யாரை நமக்கு தெரிய போகிறது, கல்யாண சாப்பாடு ஒரு பிடி பிடிக்க? ஆனால் திரும்பி பார்க்கும் இடத்திலெல்லாம், வளர்ப்பு மகன் கல்யாண அளவுக்கு நேற்று ஒரு விஷயம் கண்ணில் பட்டதென்றால் அது இந்த பிங்க் சொக்காய் காரர்களின் கல்யாணம் தான். அதுவும் யாரோ ஒரு பெரிய பாப் பாடகர் ஒருவர் அந்த மாதிரி திருமணம் செய்ய, பத்திரிக்கைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். என்ன புதுமையோ, கண்றாவியோ - இதை கல்யாணம் என்று சொல்வதா, சேர்க்கை என்று சொல்வதா என்று விவாதம் வேறு. எல்லாம் நல்லா இருந்தா சரி.

Thursday, December 22, 2005

வணக்கம்.

வணக்கம்.

ரொம்ப நாட்களாகவே தமிழில் ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று தான் அதற்கான நேரம் போலும். என்னவோ ஆரம்பித்து விட்டேனே தவிர என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஏற்கனவே குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் ஆங்கில வலைப்பதிவில் ஒன்றும் எழுதத்தோன்றாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன். இதில் புதிதாக இது வேறு.

சரி.. முதல் பதிவிற்க்கு இது போதும். நாளை முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பம். இந்த வலைப்பதிவை தொடங்க தங்கமணி நிறைய ஊக்கமளித்ததால், வீட்டிலிருந்தபடி வலை பதிய அனுமதி கிடைக்குமென நம்புகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம். வர்ர்டா?